Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
யாதகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.
கர்ப்பிணி பெண் யாதகிரி மாவட்டம் வடகெரே தாலுகா குடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(வயது 20). இவருக்கு திருமணமாகிவிட்டது. தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவருக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை பிரசவத்திற்காக மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பிரவத்திற்காக அனுமதித்தார். மேலும் 2 தினங்களுக்குள் பிரசவம் செய்வதாக கூறினார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் அறையில் பிரசவத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கர்ப்பிணி பெண் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது டாக்டரின் அலட்சியத்தால் தான் கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் கர்ப்பிணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துவதாக கூறினர். இதையடுத்து குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது